Thursday, July 28, 2011

புண்ணியம் சூல்கொண்ட நிலவு..


தித்திக்கும் திருமறையை திருநபிக்கு அருளிய
எத்திக்கும் புகழ் மணக்கும் இனிய ரமலானே வா
சங்கைமிகு லைலத்துல் கதிர் இரவைக் கைபிடித்து
ஷஅபானைப் புறந்தள்ளி சாந்தி ரமலானே நீ வா

மானுடம் செழிக்கவும் மனித நேயம் காக்கவும்
மாநிலத்தில் ஏழை படும் பசித்துயரை காட்டவே
பசித்து இறைநேசம் வேண்டி கசிந்துருகி கைகளேந்தி
விசித்து அழும் எமது பாவம் நீக்க நீயும் ஓடிவா...

இபுலிசை விலங்கிட்டு இன்னல்கள் விலகியோட
ஜன்னத்தின் தாழ் திறந்து சந்தனமணம் பரப்ப வா
சோதி முகம் காட்டி வா நிதி நிலை நாட்ட வா
நாதியற்ற எங்களுக்கு நன்மை வாரிச் சொரிய வா

நகக்குறி முகங்காட்டி அகத்திடை இருள் நீக்க
செகத்தினில் பிறப்பெடுத்து செங்கமலப் பூவிதழே வா
தூய கலிமா வழியில் துயர் நீங்கி இன்பம் பொங்க
நாயன் வழி நான் நடக்க நன்மை பயக்க வா ......

கடமை ஐந்து கணக்கிலுண்டு அதிலிரண்டு உன்னடக்கம்
மடமை போக்க நோன்பு ஜக்காத் மடியில்கட்டி நீயும் வா
கூன்பிறையே குளிர்நிலவே குவலயத்தின் மணிவிளக்கே
கண்விழித்து காத்துநின்றோம் எம் கல்பு குளிர வா....

சேனையின் செம்மை உறவுகளே
நும் அனைவருக்கும் புனித ரமலான் மாதம்
பாவக்கறை போக்கி பல்லாயிரம் நன்மைகளை
வாரி வழங்கிட வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்

அப்துல்லாஹ்

Sunday, July 17, 2011

பாராட்டும் அதனோடு சிறு பரிசுமாக இந்தக் கவிதையும் உமக்கே!

பாதித்த பக்கங்கள் அத்தனையும் பிய்த்துதறி
சாதிக்க வேண்டுமென்று எண்ணமொன்றே கொண்டு
சாதிக்காய் மாறிபுது வேடமது பூண்டு - அவர்க்கு
போதிக்கும் முறைகண்டு வியக்கின்றேன் யான்!

முத்துப்போல் பதிவுகளை முனைப்பாக இட்டுதினம்
எத்திவிட்ட ஆயிரங்கள் பதினெட்டான இந்நந்நாளில்
நாதிக்காமல் அனைவரையும் வாழ்த்திடும் உனையென்
நாதித்திக்க தித்திக்க வாழ்த்துகிறேன் மகிழ்ந்து!

உறங்காத சிந்தனைகள் ஒருகோடி சேர்த்து
சிறந்திடுவாய் சிறப்பான கோடிகவி யாத்து
உயர்வான இன்னும்பல உயரங்கள் தொடவே
பிறர்போல வாழ்த்திடுவேன் அன்புடனே தினமே!

சேனைக்கு நீசெய்யும் சேவையினைக் கண்டுநான்
வாயடைத்துப் போகின்றேன் வார்த்தையிலை சொல்ல
வானைப்போல் சேனையது உயர்ந்துபுகழ் கொள்ள
வாய்திறந்து வாழ்த்துகிறேன் வாடிடாது வளர்க்க!


அன்புடன்,
யாதுமானவள்

Saturday, July 16, 2011

சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!

சம்ஸ்!
மூன்று எழுத்தின் தாரக
மந்திரம்!

சேனையோடு உலாவ,
இணையத்தில் ,இதயத்தை
இணைத்த சூத்திரதாரி!

உன் உழைப்பை சொல்லி ,
உன் பிம்பம் பதித்தே
வந்தது உன் படைப்புகள்!

இருபத்திரண்டு என்று
இறுமாப்புக் கொள்ளாமல்,
இணையத்தில் சிரித்ததது!

இதயங்கள் எல்லாம்
இணைக்க உன் படைப்புக்கள்
தூது சொன்னது!துணைப் போனது!

கழித்த நிமிடங்களை,
ரசனைக்குள் இணைத்து,
சேனைக்குள் சோலையாக்கியது!

இது தொடக்கமே.
இனி தொடருவது எல்லாம்,
இதையத்தை இணைக்குமே!

நேற்றும் சொன்னது,
இன்றும் சொல்கிறது,
நாளையும் சொல்லும்....

சேனைக்குள் அழைத்து .
இணையத்தில் ,இதையத்தை
இணைத்த வித்தகன் நீ என்று!

இன்னும் தொடரட்டும்
இணையத்தில் உன் போராட்டம்,
இனிய வெற்றி தேரோட்டம்,

சேனையின் சிங்கத்தமிழன், சகோதரன் சம்சுதீன் இன்னும் பலப்பல சாதனைகள் பெறவேண்டி தமிழ்ச் சகோதரி யாதுமானவள் என்ற லதாராணி மிக்க அன்புடனும் அக்கறையுடனும் வாழ்த்துகிறேன்.


சேனையின் சிங்கத்தமிழன், சகோதரன் சம்சுதீன் இன்னும் பலப்பல சாதனைகள் பெறவேண்டி தமிழ்ச் சகோதரி யாதுமானவள் என்ற லதாராணி மிக்க அன்புடனும் அக்கறையுடனும் வாழ்த்துகிறேன்.

22000 பதிவுகள் இட்டு தன் உயர்ந்த குறிக்கோளினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வைராக்கிய தமிழனுக்கு ஒரு வாழ்த்துப்பா....

இக்கரை அக்கரை எக்கரை தேடினுமுன்
அக்கறை யாலமைந்த சேனை போலாகுமா?
தக்கவர் துணையுடன் தமிழனின் பெருமையை
பக்கங்கள் தவறாது படித்திடப் பதிக்கிறாய்

நற்றமிழ்ச் சேனையை நற்பாதையில் வளைக்கிறாய்
மற்றவர் வியந்திட மிடுக்குடன் வளர்க்கிறாய்
உற்றஉன் வேகத்தால் உயர்ந்து நீநிற்பதை
குற்றமுள்ள நெஞ்சினோர் குமுறியே காண்கிறார்

காலத்தே ஆங்கே கொண்ட வோர் முற்றம்
ஞாலத்துத் தமிழரை இணைப்பதாய்க் கணைத்து
ஆலம் போல் கக்கிய விஷத்தைச் செரித்துன்
கோலத்தை இங்கே கூட்டினாய் அழகாக

தொழுநோய்க் கிருமிகள் தொலைத்திங்கு தனியாக
எழுச்சியாய் எழுதமிழ் படைப்பவருன் துணையாக
பழமுதிர்ச் சோலையாய் சேனையும் மாறிட
புழுங்கியே நோகின்றார் பகைவரும் இன்று!

வஞ்சகம் பேசுபவர் வார்த்தைகள் சுட்டிட
நெஞ்சினில் தழும்புகள் இன்னமும் நிலைத்திட
கொஞ்சமும் குன்றாது குறிக்கோளைக் கொண்டதால்
விஞ்சிதான் நிற்கிறது உன்வியத்தகு சாதனை!

இன்னுமின்னும் பதிவுகள் இட்டவாறு சென்றிட
மின்னி மின்னி நகைத்து நற்பாதையில் சென்றிட
இன்றுபோ லென்றுமே எழுச்சியோ டியங்கிட
பன்னிறப் பூக்களைத் தூவியாம் வாழ்த்தினோம் !

அன்புடன்,
யாதுமானவள் (எ) லதாராணி





Sunday, July 10, 2011

சேனைக்கு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் பல்லாயிரம் !

பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று

மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று

நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.

அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே

உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !

அன்புடன்,
யாதுமானவள்
Related Posts Plugin for WordPress, Blogger...